தமிழகத்தில் கடந்த மாதம் தக்காளி விலை உச்சத்தில் இருந்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு பல்வேறு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தக்காளி விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது.
இவை வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் முக்கிய நகரங்களுக்கும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆனால் தற்போது கடந்த 2 வாரங்களாக 1 பெட்டி ரூ.120 முதல் ரூ.140 வரை மட்டுமே விற்பனையானது. இதனால் பல விவசாயிகள் போதிய விலை கிடைக்காத விரக்தியில் தக்காளியை சந்தையின் வெளிப்பகுதியில் கொட்டிச் செல்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு சமயத்தில் கூட தக்காளிக்கு நல்ல விலை கிடைத்தது. ஆனால் தற்போது வரத்து அதிகரிப்பின் காரணமாக போதிய விலை கிடைக்கவில்லை.
விவசாயிகள் கொண்டு வரும் தக்காளிகளின் தரம் குறைந்தது என பிரித்து கழிவில் சேர்க்கப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு இடையில் மருந்து தெளித்து, பராமரித்து, கூலி ஆட்கள் வைத்து பறித்து சந்தைக்கு கொண்டு வரும் வாடகை கூட கிடைக்காத நிலையில் தற்போது 1 கிலோ ரூ.8க்கும் கீழ் வாங்குகின்றனர். இதனால் பலர் அந்த தொகையை கூட வாங்காமல் குப்பையில் வீசி செல்கின்றனர்.
எனவே வரத்து அதிகரிக்கும் சமயங்களில் தக்காளியை பதப்படுத்தி வைத்து விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.