உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் தேசிய தடகள போட்டி

ஒழுக்கம் இருந்தால் இலக்கை அடையலாம் நடிகர் ஜீவா பேச்சு

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் நடத்தும் 21-வது தேசிய அளவிலான இளையோர் தடக ளப்போட்டி திருவண்ணா மலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கி பேசினார்.

துரோணாச்சார்யார் விருது பெற்ற ரமேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், அருணை மருத்து வக்கல்லூரி டீன் குணசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தடகள சங்க செயலாளர் லதா வரவேற்று பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நடிகர் ஜீவா

விழாவில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் ஜீவா கலந்து கொண்டு போட்டிக்கான ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். அவர் பேசியதாவது:-

தமிழக விளையாட்டு வீரர்கள் ஆசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர்.

இந்திய அணியில் தமிழக வீரர்கள் அதிகளவில் இடம் பெறுகின்றனர். தடகள சங்கம் சார்பில் மேலும் இது போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தி தடகள வீரர்களை உருவாக்க வேண்டும். இதற்கு திரை துறையின் சார்பில் எப்பொழுதும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.

விளையாட்டு வீரர்களுக்கு அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் தற்போது கிடைத்து வருகின்றது. விளையாட்டு வீரர்கள் சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அதிகளவில் டி.வி.யையும், செல்போனையும் பார்க்கக் கூடாது.

இலக்கு அடையலாம்

உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். அர்ப்பணிப்பு, ஒழுக்கம், உறுதி ஆகியவை இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம். இந்த நாள் திரும்பவும் வராது. இந்த நாட்களை அனுபவித்து வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஜூன் மாதத்தில் கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் இந்திய அணியின் சார்பில் பங்கேற்க புள்ளிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.