கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

25 வருடங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். விநாயகர் கோவிலினை விரிவுபடுத்துகிறோம் என்று சிலர் வழிப்பாதையில் சுற்றுச்சுவர் கட்ட ஆரம்பித்துள்ளனர்.

திருப்பூர்:

திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் கன்னிமார் தோட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்பங்களுடன் வந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் மேற்கூறிய முகவரியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றோம். எங்கள் குடியிருப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள நத்தம் காலி இடத்தை 25 வருடங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். 10 மீட்டர் நீளமுடைய இந்த பாதையானது கொண்டத்துக்காளியம்மன் நகர், அறிவொளி நகர், பஞ்சாயத்து அலுவலக பின்புறம் உள்ள தெரு மற்றும் பஞ்சாயத்து அலுவலகத்தை எங்கள் தெருவோடு இணைக்கும் முக்கிய வழிப்பாதை ஆகும்.

இந்நிலையில் நத்தம் காலியிடத்தில் உள்ள விநாயகர் கோவிலினை விரிவுபடுத்துகிறோம் என்று சிலர் வழிப்பாதையில் சுற்றுச்சுவர் கட்ட ஆரம்பித்துள்ளனர். மேலும் வழிப்பாதையினை முழுவதுமாக பயன்படுத்த முடியாதவாறு கழிவறை கட்டியும் துணி துவைக்கும் கல்லை வைத்து கழிவு நீரை ஊற்றியும் கூர்மையான தகரங்களை வைத்தும் பொதுமக்கள் நடக்க முடியாதவாறு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT