கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

தொடர் மழையால் மானாவாரி சாகுபடிக்கான விதைப்பு பணிகள் தீவிரம்

விளைநிலங்களில் உழவு செய்வதற்கும், சாகுபடி விதைப்புக்கு தேவையான ஈரப்பதம் உள்ளது.சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட நடவு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

உடுமலை :

உடுமலை சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விளைநிலங்களில் உழவு செய்வதற்கும், மானாவாரி சாகுபடி விதைப்புக்கு தேவையான ஈரப்பதம் உள்ளது.இதையடுத்து சாகுபடி பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக மானாவாரியாக சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிக்கான விதைப்பு மற்றும் நடவு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது விதைப்பு செய்வதால் பயிரின் வளர்ச்சி தருணத்தில் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் வாய்ப்புள்ளது. கால்நடைகளின் பசுந்தீவனம் மற்றும் உலர் தீவன தேவைக்காக மானாவாரியாக சோளம் விதைப்பு செய்கிறோம் என்றனர்.

தற்போது நிலவும் வானிலையால் தக்காளி செடிகளில், இலைக்கோட்டு பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசலை, மழையில்லா நேரங்களில் தெளிக்க வேண்டும். குளிர் சீதோஷ்ணம் உட்பட காரணங்களால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் வானிலை சார்ந்த வேளாண் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT