திருப்பூர்
எமிஸ் இணையதளம் மூலம் பள்ளிக் கல்வித் துறையின் பல திட்டங்கள், செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படுகிறது. தேவையான செயல்முறைகளும் வகுக்கப்படுகிறது.பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளின் விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வருகைப்பதிவை கண்காணிப்பது, தினசரி அப்டேட் செய்வது எளிதாகியுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேடு 'TNSED Attendance'என்ற மொபைல் ஆப் மூலம் தினசரி பதிவேற்றம் செய்யப்படுகிறது. முந்தைய கல்வியாண்டு இறுதியில் செயல்பாடு பயன்பாட்டுக்கு வந்தாலும் தற்போது அப்டேட் செய்யப்பட்டு, ஆசிரியர், மாணவ, மாணவிகள் வருகைப்பதிவு காலை, மாலை இருவேளை கட்டாய பதிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பள்ளிக்கு மாணவர், மாணவி வரவில்லையெனில், தங்கள் மகன்/மகள் பள்ளிக்கு இன்று (தேதியுடன்) வரவில்லை என பெற்றோருக்கு உடனடியாக எஸ்.எம்.எஸ்., சென்று விடும்.
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், எமிஸ் இணையதளம் அப்டேட் செய்யப்பட்ட பின், வருகைப்பதிவு நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., செல்லும் திட்டம் நடப்பு கல்வியாண்டு அமலாகி கடந்த 15-ந் தேதி முதல் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., சென்று சேர்கிறது. பெற்றோர் அறியாமல் மாணவர் விடுப்பு எடுத்தால் உடனே தெரிய வந்து விடும் என்றனர்.