விபத்து ஏறப்டுத்திய சரக்கு லாரியை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

பல்லடம் அருகே பள்ளி வேன்-லாரி மோதி விபத்து

சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி பேருந்தின் பின்புறமாக பக்கவாட்டில் மோதியது.விபத்தில் பள்ளி பேருந்தில் பயணித்த 6ம் வகுப்பு மாணவன் , 7-ம் வகுப்பு மாணவி ஆகிய இருவர் காயம் அடைந்தனர்.

பல்லடம் :

பல்லடம் - தாராபுரம் சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் 25க்கும் மேற்பட்டோரை பள்ளி வேனில் ஏற்றிக்கொண்டு கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பள்ளி பேருந்து பனப்பாளையத்தில் இருந்து பெத்தாம்பாளையம் செல்லும் சாலையில் வலது ஓரமாக திரும்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி பேருந்தின் பின்புறமாக பக்கவாட்டில் மோதியது.அதன் பின்னரும் நிற்காமல் அருகே உள்ள பெருமாள் கோவில் சுற்று சுவரில் மோதி நின்றது.

இந்த விபத்தில் பள்ளி பேருந்தில் பயணித்த 6ம் வகுப்பு மாணவன் , 7-ம் வகுப்பு மாணவி ஆகிய இருவர் காயம் அடைந்தனர். மேலும் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் விபத்துக்குள்ளான பள்ளி வேனில் இருந்த மாணவ, மாணவிகளை மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ராஜா என்பவரை பிடித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதே போல் பல்லடம் - தாராபுரம் சாலை பிரிவு அருகே தேனி மாவட்டம் குமுளியில் இருந்து 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவை மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று முன்னாள் சென்ற சொகுசு காரின் பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டது .இதில் சொகுசு கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பல்லடத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துக்கள் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT