திருப்பூர்:
புறாக்கள் நெடு தூரம் வரை பறக்கும் திறனுடையது என்பதால், அவைகள் கடிதப்போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன.இந்த சூழலில் அதன் நீட்சியாக தற்போது இவ்வகை புறாக்கள் நன்கு பயிற்சி கொடுத்து புறா பந்தயத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பந்தயத்திற்காகப் பழக்கப்பட்ட புறாக்கள் வெகுதொலைவில் கொண்டுவிடப்பட்டு அவைகள் தங்கள் கூட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தை வைத்து போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கோவை, தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்றளவும் இந்த புறா பந்தயங்கள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திலும் புறா பந்தயமானது நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட புறா கலை வளர்ப்பு சங்கம் சார்பில் புறா பந்தயத்தை நடத்தினர். இதில் 9 புறாக்கள் பந்தயத்தில் கலந்து கொண்டது. திருப்பூர் ரயில் நிலையம், தென்னம்பாளையம் , பெருச்சிபாளையம் உள்ளிட்ட இடங்களில் புறா பந்தயமானது நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட புறாக்கள் தங்கள் இருப்பிட பகுதிக்குச் சென்று கீழே இறங்காமல் தொடர்ந்து பறந்து கொண்டிருக்க வேண்டும்.
எந்த புறாக்கள் கீழே இறங்காமல் அதிக நேரம் பறக்கிறது என்ற நேரத்தை கணக்கிட்டு பரிசுகள் அறிவிக்கப்படும். இந்த போட்டியில் வெற்றி பெறும் புறாக்களுக்கு சான்றிதழ்களும் புறா உரிமையாளர்களுக்கு பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளது.