வெள்ளக்கோவில்:
வெள்ளக்கோவிலில் கழிவுநீா் அகற்றும் வாகனங்களை இயக்குவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெள்ளக்கோவில் நகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
குடியிருப்புகள், வணிக வளாகங்களில் இருந்து கழிவுநீா் எடுப்பதற்கும், அவற்றை வாகனங்களில் எடுத்து செல்வதற்கும், அப்புறப்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. கழிவுகளை பாதுகாப்பற்ற வகையில் அப்புறப்படுத்துவது தொழிலாளா்களின் உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தானது.
எனவே கழிவுநீா் அகற்றும் வாகனங்களை நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கான பதிவுக் கட்டணம் ரூ.2 ஆயிரம். உரிமம் பெற்றவா் தவிர மற்றவா்கள் வாகனத்தை இயக்கக் கூடாது.
விதிகளை மீறி இயக்கினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.