பல்லடம் :
பல்லடத்தில் ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் முத்துகுமார் வரவேற்றார்.இதில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் இளங்குமரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளியான செரீப் என்பவருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் அரசு மருத்துவமனை அருகில்பெட்டி கடை அமைத்து தரப்பட்டது. மேலும் கொரோனா காலத்தில் மக்களுக்காக சேவை புரிந்த மருத்துவம், காவல்,தீயணைப்பு, பத்திரிக்கை துறையினரை பாராட்டி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட பொதுசெயலாளர் வரதராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், உதவி ஆளுநர் ராமகிருஷ்ணன்,ரெயின்போ ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் தங்கலட்சுமி நடராஜன், கவிதா சுந்தர்ராஜன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.