திருப்பூர்
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நடந்து வருகிறது.இந்நிலையில் முன்கள பணியாளர்கள், அரசு ஊழியர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பல்வேறு பிரிவுகளாக இந்த தடுப்பூசி போடப்பட்டது.
இதற்கிடையே 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை அரசு பள்ளியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்படி நேற்று ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் 7,673 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில், மற்ற மாணவ-மாணவிகளுக்கும், பள்ளி செல்லாத சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.