திருப்பூர்:
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் நகராட்சி, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான உபரி பணியிடங்கள் உள்ளன.
அவ்வகையில் உபரி என கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடத்தப்படவுள்ளது.
இதனால் அந்த ஆசிரியர்களின் விபரங்களை, ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிகல்வித்துறை பணியாளர் தொகுதி இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி திருப்பூர் கல்வி மாவட்டத்தில் அதற்கான பணிகள் பள்ளிகள்தோறும் தீவிரமடைந்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நடப்பு கல்வியாண்டில் அந்தந்த பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அவ்வகையில் பள்ளிகள்தோறும், உபரி என கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் விபரங்கள், இன்று பதிவேற்றம் செய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
முற்றிலும் கண் பார்வையற்றவர்கள், 40 சதவீதம் மாற்றுத்திறனாளிகள், என்.சி.சி., பொறுப்பில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் எவரேனும் உபரியாக கண்டறியப்பட்டால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். அவர்களுக்கு பதிலாக அதே பாடத்தில் உள்ள அடுத்த இளையவரை உபரியாக தேர்வு செய்யப்படும்.
மேலும் அதே பாடத்தில் பணிபுரியும் ஆசிரியர் எவரேனும் வேறு பள்ளிக்கு செல்ல விருப்பம் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியரின் கையொப்பத்துடன் கூடிய ஆவணத்தின் அடிப்படையில் பணிநிரவலுக்கு உட்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.