உடுமலை:
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பால், ஆவின் மற்றும் தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு அளிக்கப்படுகிறது. மக்களுக்கும் நேரடியாக பால் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் பெரும்பாலான பகுதிகளில் பாலின் தரம் மற்றும் எடையை சோதனை செய்து அதற்குரிய ரசீது வழங்கப்படுவதில்லை. இதனால், வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை. பாலின் எடை அளவு குறைவதால், நுகர்வோர் மட்டுமின்றி பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கின்றனர்.
அதேநேரம் பாலின் தரத்தை கண்டறியும் வகையில் ‘இமெட்’ எனும் ‘எலக்ட்ரானிக் மில்க் அடல்ட்ரேஷன் டெஸ்ட்’ கருவிகளை, இத்தகைய இடங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:
உணவு பாதுகாப்புத்துறையால், அதிகளவில் பால் உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்யப்படும் இடங்களைத் தேர்வு செய்து அங்குள்ள பொது இடங்களில் ‘இமெட்’ கருவி வைக்க வேண்டும். அதன் வாயிலாக நுகர்வோர் அனைவரும் இலவசமாக பாலின் தரத்தை பரிசோதிக்கலாம்.
ஏற்கனவே இக்கருவிகள் சில இடங்களில் வைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் கருவியின் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. அதேபோல் பெரும்பாலான தனியார் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பாலின் தரம் குறைவாகவே உள்ளது. அங்கு இமெட் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கலப்படம் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.