கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

ஜப்பான் நிதி உதவியால் தரம் உயரும் வேலம்பாளையம் சுகாதார நிலையம்

சுகாதாரம், மருத்துவம், குடிநீர், போக்குவரத்து திட்டங்களுக்கு நிதி உதவி பெறப்படுகிறது.

திருப்பூர்:

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு இணையம்’ (ஜிக்கா) சார்பில் சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் -2க்கு, நிதி உதவி கிடைத்தது. மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து 4,710 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ‘ஜிக்கா’ நிதி உதவியுடன் தமிழகத்தில் பல்வேறு மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.

சுகாதாரம், மருத்துவம், குடிநீர், போக்குவரத்து திட்டங்களுக்கு நிதி உதவி பெறப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

திருப்பூர் வேலம்பாளையம் நகர்ப்புற சுகாதார நிலையம், இரண்டாம் நிலை அரசு மருத்துவமனையாக ‘ஜிக்கா’ நிதியுதவியுடன் தரம் உயர்த்தப்படுகிறது. அதற்காக 27 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணி துவங்கி உள்ளது.

அத்துடன் 3.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன ஆபரேஷன் தியேட்டர், ஆக்சிஜன் கியாஸ் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 30.48 கோடி ரூபாய் மதிப்பிலான பணி நிறைவு பெற்றதும், தரமான மருத்துவ சேவை கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.