தாராபுரம்:
தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீரென கடைவீதி பகுதியில், பொள்ளாச்சி சாலை, பூக்கடை கார்னர், பெரியகடை வீதி, பழைய நகராட்சி பகுதியில் செயல்படும் ஓட்டல்கள், பழக்கடைகள், டீக்க–டைகள் மற்றும் பேக்கரி உள்ளிட்ட 40 கடைகளில் மாதிரி எடுக்கப்பட்டு நடமாடும் சோதனை கூடத்தில் தரம் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை உத்தரவின் பேரில் தாராபுரம் உணவு பாதுகாப்பு துறை இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் நடமாடும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வுக்கூட நிபுணர்கள் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.
தாராபுரம் பெரிய கடைவீதி, சின்னகடைவீதி, பொள்ளாச்சி ரோடு பூக்கடைக்கார்னர், என்.என்.பேட்டை வீதி பகுதிகளில் உள்ள மளிகைக்கடை, பேக்கரி, தள்ளுவண்டி கடைகள் குளிர்பான கடைகளில் உணவு மாதிரிகளை எடுத்தனர். எண்ணெய், குளிர்பானம், பருப்பு உள்பட பல்வேறு மாதிரிகள் எடுக்கப்பட்டது. நடமாடும் சோதனை கூடத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
லேபிள் சோதனை செய்ததன் அடிப்படையில் மாதிரி எடுத்தவர்களின் பொருட்கள் தரம் குறைவாக இருந்ததால் அந்த கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டது. மேலும் தரத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை உணவு பாதுகாப்பு துறை மூலம் வழங்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.