பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருந்தபோதிலும் மாலை வரை மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் லேசாக பெய்ய துவங்கிய மழை, பின்னர் தொடர்ந்து விட்டு விட்டு பெய்தது. நேரம் செல்ல செல்ல பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து பயங்கர இடி மின்னலுடன் மழை கொட்டியது.
இதனால் பல்லடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளை நோக்கி மழைநீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்தது. மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். பச்சாபாளையம் காலனி, அண்ணா நகர், மகாலட்சுமிபுரம், பனப்பாளையம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
மேலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதி மக்கள் கடும் துயரத்திற்கு ஆளானார்கள். பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மழை அளவு 15 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.