அவிநாசி :
அவிநாசி ஒன்றியம் சேவூர், தத்தனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை மையப்படுத்தி ‘சிப்காட்’ தொழிற்பேட்டை அமைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த, ஆகஸ்டு மாதமே இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில், அப்போதைய முதல்வர் பழனிசாமி, திட்டம் கைவிடப்படுவதாக தெரிவித்தார்.
இருப்பினும் இந்த விவகாரம், தற்போது மீண்டும் கிளம்பியுள்ளது. சட்டசபை கூட்டத்தொடரில்அவிநாசி எம்.எல்.ஏ., தனபால், இவ்விவகாரத்தை எழுப்பினார்.
மாநிலம் முழுவதும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய தொழில் பூங்காக்களை அரசு அமைக்க உள்ளதாக தெரிகிறது. எனது தொகுதிக்கு உட்பட்ட தத்தனூரில், ‘சிப்காட்’ தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே அரசுக்கு தொழிற்பூங்கா அமைக்கும் எண்ணம் இருந்தால் அதனை கைவிட வேண்டும் என அவர் பேசியுள்ளார். இதற்கு சம்மந்தப்பட்ட துறை சார்பிலான விவாதம் வரும் போது இதுகுறித்த தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.