கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்கள் ஆதார் எண் பெற சிறப்பு ஏற்பாடு

1 முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்காக மட்டுமே ஆதார் மையம் செயல்படுகிறது.

மாலை மலர்

திருப்பூர்:

பள்ளி கல்வித்துறையில் ‘எமிஸ்’ கல்வி வலைதளத்தில், அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களின் ஆதார் எண்கள் உள்ளீடு செய்யப்பட்டு வருகின்றன. இதில் 30 சதவீத மாணவர்கள் ஆதார் எண் இதுவரை பெறப்படவில்லை. ஆதார் எண் இதுவரை பெறப்படாத பகுதிக்கு உட்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் அருகில் இயங்கும் பள்ளி மாவட்ட வட்டார வளமையங்களில் நிரந்தர ஆதார் பதிவு மையம் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கே.எஸ்.சி., பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மையம், உடுமலை, பல்லடம், அவிநாசி வட்டார வளமையங்கள் என 4 இடங்களில் ஆதார் மையங்கள் இயங்குகின்றன.

இதுகுறித்து கே.எஸ்.சி., பள்ளி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் அலீமா கூறியதாவது:

1 முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்காக மட்டுமே இந்த ஆதார் மையம் செயல்படுகிறது. 1 முதல் 10 வயதினருக்கு புதிதாக ஆதார் எண் பதிவிடப்படுகிறது. மேலும் 5 முதல் 15 வயதினருக்கு கைரேகை பதிவு ‘அப்டேட்’ செய்யப்படுகின்றன. இதுவரை 200 பேருக்கு பதிவு செய்துள்ளோம். தினமும் 10 முதல் 15 பேர் வரை மாணவர்கள் வருகின்றனர்.

முதன்முறையாக பதிவு செய்ய குழந்தையின் அசல் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் மற்றும் குழந்தையை உடன் அழைத்து வர வேண்டும். 5 வயதுக்கு மேல் கைரேகை பதிவிட, குழந்தையுடன் அவர்களை பழைய ஆதார் கார்டை எடுத்து வர வேண்டும். இது முற்றிலும் இலவசம். கொரோனா சார்ந்த முன்னெச்சரிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்திலேயே ஆதார் எண் பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.