பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கோளறுபதி நவகிரகக் கோட்டையில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. மகா சிவராத்திரியை முன்னிட்டு கோ பூஜை, 27 அக்னி குண்டங்கள், 108 கலச அபிஷேகம்,108 குட பால் அபிஷேகம், அம்மையப்பர் திருவீதி உலா,மகா தீப ஆராதனை,பஜனை, சிவநாம கூட்டுப்பிரார்த்தனை, இன்னிசை நிகழ்ச்சி ஆகியன நடந்தன.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரஸ்வாமிகள் அருளுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போல பல்லடம் பட்டேல் ரோட்டில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவபெருமானுக்கு நான்கு கால பூஜையும், அலங்கார அபிஷேகமும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு முதல் கால பூஜையும், 10 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெற்றது.
சிவபெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், குங்குமம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதேபோல பல்லடம் பொன்காளியம்மன் கோவில், பல்லடம் அருகே உள்ள அல்லாளபுரம் உலகேஸ்வரர் திருக்கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் மகா சிவராத்திரிவிழா நடைபெற்றது.