உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை,தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில், பல்லடம், திருமுருகன்பூண்டி ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 6 நகராட்சிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.
இந்தநிலையில் இன்று நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கயம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கும், திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் பதவி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மற்ற 4 நகராட்சிகள் தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மறைமுகத் தேர்தலையொட்டி 6 நகராட்சி தலைவர் பதவிக்கான தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் இன்று காலை 6 நகராட்சிகளின் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
தாராபுரம் நகராட்சியில் மொத்தம் 30வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 24,அ.தி.மு.க. 3, பா.ஜ.க.காங்கிரஸ், சுயேட்சை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்தன. நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த பாப்பு கண்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
வெள்ளகோவில் நகராட்சியில் மொத்தம் 21வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 14,அ.தி.மு.க. 6, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்தன. நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த கனியரசி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பல்லடம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 12, பா.ஜ.க. 2, அ.தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. , சுயேட்சை ஆகியவை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்தன. நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த கவிதாமணி ராஜேந்திரகுமார் பெரும்பாலான கவுன்சிலர்கள் ஆதரவுடன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நகராட்சி துணை தலைவர்கள் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று மதியம் நடக்கிறது. மறைமுக தேர்தலையொட்டி அந்தந்த நகராட்சி அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.