உடுமலை:
கரும்பு ஆலைக்கு கரும்பு சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.150வீதம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டது.
அதன்படி திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 2020-2021ம் ஆண்டு கரும்பு அரவைப்பருவத்தில் கரும்பு வழங்கிய ஆலை அங்கத்தினர்களான 441 விவசாயிகள் மற்றும் அவர்கள் ஆலைக்கு வழங்கிய கரும்பின் எடை அளவு ஆகியவை குறித்த விபரம் ஆலை நிர்வாகத்தில் இருந்து மாவட்ட அளவிலான குழுவிற்கு அனுப்பப்பட்டு அந்த குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு தமிழ்நாடு சர்க்கரைத்துறை ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
441 விவசாயிகள் இந்த ஆலைக்கு வழங்கிய 47 ஆயிரத்து 823 டன் மற்றும் 529 கிலோ கரும்பிற்கான சிறப்பு ஊக்கத்தொகை கணக்கிடப்பட்டு மொத்தம் ரூ.71 லட்சத்து 73 ஆயிரத்து 529 மற்றும் பைசா 35 பட்டுவாடா செய்யப்பட்டது. இந்த தொகை தமிழக அரசிடமிருந்து அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் சேர்ந்தது.