திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த மிளகாய் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன் விவசாயிகள் முற்றிய மிளகாயை எடுத்து அதில் இருந்து விதை எடுத்து நாற்று உற்பத்தி செய்வர்.
தற்போது புதிது புதிதாக கம்பெனிகள் மிளகாய் நாற்றுகளை உற்பத்தி செய்ய துவங்கியுள்ளன. புதிதாக உருவாக்கிய சில ரகங்கள் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. மேலும் தற்போது வெள்ளை ஈ மற்றும் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. தேவையைவிட உற்பத்தி குறைந்ததால் மிளகாய் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
ஒரு கிலோ பச்சை மிளகாய் 80 ரூபாய்க்கு விலை போகிறது. விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பெரும்பாலான காய்கறிகள் விலை வீழ்ச்சியை சந்தித்த நிலையில் மகசூல் பாதிப்பால் மிளகாய் விலை மட்டும் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் மிளகாய் பயிரிட்ட விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.