அனுப்பர்பாளையம்:
ரேசன் கடை ஊழியர்கள் இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்று தொ.மு.ச. கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மின்சார வாரிய தொ.மு.ச.செயலாளர் ஈ.பி.அ.சரவணன் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணிக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட அங்கேரிபாளையம் பகுதியில் செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கத்தின் கீழ் 24 ரேஷன்கடைகள் இயங்கி வருகின்றது.
இந்த சங்கத்திற்குட்பட்ட 24 ரேஷன்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், ஊழியர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றார்கள்.
இங்குள்ள சில ஊழியர்களுக்கு முறைகேடாக இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் பெண், மற்றும் வயதான ஊழியர்கள் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளனர். பாதிப்புக்குள்ளான ரேஷன் கடை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
கொரோனா நோய் தொற்று காலத்திலும் இடைவிடாமல் தினந்தோறும் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வரும் ரேஷன்கடை ஊழியர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.