திருப்பூர்:
திருப்பூர் அவினாசி ரோடு அம்மாபாளையம் அருகே உள்ள கானக்காடு பகுதியில் தனியார் பாறைக்குழி உள்ளது. இந்த பாறைக்குழியில் திருப்பூர் மாநகராட்சி 1 மற்றும் 2-வது மண்டலங்களுக்குட உட்பட்ட பகுதுகளில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
அங்கு குப்பை கொட்டுவதால் பாறைக்குழியை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் இங்கு குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பாறைக்குழியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அம்மாபாளையம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கருப்பு கொடி கட்டப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று பல்வேறு வீடுகள், வணிக நிறுவனங்களில் கருப்பு கொடிகள் கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.