காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே அவினாசிபாளையம் அருகில் உள்ள கோவில்பாளையம், லட்சுமி நகரில் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணறு சுமார் 30 அடி ஆழம் கொண்டது. தற்போது நல்ல மழை பெய்து வருவதால கிணற்றில் நீர்மட்டம் சற்று உயர்ந்து 8 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இந்த கிணற்றில் இளம் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. உடனே இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இதுகுறித்து காங்கயம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் உடலை கயிறு கட்டி மீட்டனர். விசாரணையில், அவினாசிபாளையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சக்திவேல். இவரது மனைவி எஸ்.கவுசல்யா (வயது 25). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது என்று தெரியவந்தது. சுடிதார் அணிந்து டிப்-டாப்பாக காணப்படும் இந்த பெண், எப்படி இறந்தார் என்று தெரியவில்ைல. யாராவது இவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்ற பல கோணங்களில் அவினாசிபாளையம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.