திருப்பூர்:
தமிழகம் முழுவதும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் பயன்பாட்டில் உள்ளது. நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் கட்டணமில்லாமல் மக்களுக்கு கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் இத்திட்டம் மூலம் பயன் பெறலாம். இத்திட்டத்தில் இணைய ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இச்சூழலில் முறைகேடாக பெறப்பட்ட அட்டைகளை கண்டறிந்து அவற்றை ரத்து செய்வதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட காப்பீடு திட்ட அலுவலர் ஒருவர் கூறியதாவது:-
காப்பீடு திட்ட அட்டை புதிய வடிவில் வடிவமைக்கப்பட்டு வருவதால், அட்டை கிடைக்க தாமதமாகி வருகிறது. மேலும், கடந்த காலங்களில் ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரம் இருந்தபோது, வி.ஏ.ஓ.,க்களின் ஆதரவுடன் ஏராளமானோர் போலி வருமான சான்று பெற்று இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
அவ்வாறு அரசு ஊழியர்கள், தொழில் முனைவோர், வியாபாரிகள் என லட்சங்களில் வருவாய் ஈட்டி வரும் பலரும் இத்திட்டத்தில் காப்பீடு அட்டை பெற்றுள்ளனர். தற்போது ஆதார் இணைக்கப்பட்டதன் அடிப்படையில் காப்பீடு அட்டை பெற்றவர்களின் வருவாய் உள்ளிட்ட தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முறைகேடாக பெற்றுள்ள அட்டைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.