பல்லடம் நகருக்கு வந்த  பேனா நினைவு சின்ன ஊர்தியை படத்தில் காணலாம்.  
உள்ளூர் செய்திகள்

கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவு சின்ன ஊர்தி பல்லடம் வந்தது-வரவேற்பு

60 அடி நீளம் உள்ள பேனா வாகனத்தில் கருணாநிதி எழுதிய புத்தகங்களின் முகப்பு பக்கங்கள் இடம் பெற்றுள்ளன. பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது.

மாலை மலர்

பல்லடம்: 

தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழை இளைய தலைமுறையினர் அறிய செய்யும் வகையில் அமைக்கப்பட்ட பேனா ஊர்தி நேற்று பல்லடம் நகருக்கு வந்தது.

கடந்த நவம்பர் 11-ல் கன்னியாகுமரியில் இந்த வாகனம் புறப்பட்டது. 60 அடி நீளம் உள்ள பேனா வாகனத்தில் கருணாநிதி எழுதிய புத்தகங்களின் முகப்பு பக்கங்கள் இடம் பெற்றுள்ளன. வாகனத்தின் உள்ளே கருணாநிதியின் சிலை இடம் பெற்றுள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை, சிவகங்கை, கோவை மாவட்டங்கள் வழியாக தற்போது பல்லடம் நகருக்கு வந்தது. அந்த வாகனத்திற்கு பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

பின்னர் பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. ஊர்தியின் உள்ளே கருணாநிதியின் கோபாலபுர இல்ல அமைப்பு, அஞ்சுகம் அம்மாளின் சிலை, அதன் அருகில் கருணாநிதி இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற சிலை, அவர் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன.

இந்த தேர் முன்பு மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் நேரில் வந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அந்த வாகனம் திருப்பூருக்கு புறப்பட்டு சென்றது.