உடுமலை:
மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் இம்மாதம் இன்று முதல் 28-ந்தேதி வரை, அறிவியல் திருவிழாவை கொண்டாடவுள்ளன. அறிவியல் மகத்தானது என்ற கருத்தாக்கத்தின் கீழ், அறிவியல் தகவல் தொடர்பு பரப்புரை மற்றும் விரிவாக்கம் என்ற அடிப்படையில் பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.
அதில் அறிவியல் துறையின் சாதனைகளை விளக்கும் வகையில் கண்காட்சிகள், பாடல், புத்தக வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன.
கோவை மண்டலம் சார்பில், உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாகவும் இவ்விழா நடத்தப்படவுள்ளது.
இதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது.
மேலும் நாளை 23-ந்தேதி முதல் 25&ந்தேதி வரை, இரவு வான் நோக்கும் நிகழ்வும், ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி மற்றும் கமலம் கலை அறிவியல் கல்லூரியில் விஞ்ஞானிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளரை 8778201926 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.