உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதிகளில் சிறு, குறு விவசாயிகள், கிணற்றுப்பாசனத்தின் மூலம் கொத்தமல்லி தழை சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. வீரிய ரக விதைகளை அடர்த்தியாக விதைப்பு செய்து பராமரிக்கின்றனர். முகூர்த்த சீசனை இலக்கு வைத்து இச்சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
நடப்பு சீசனில் வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கொத்தமல்லி தழைக்கு விலை கிடைக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ கொண்ட கொத்தமல்லி தழை கட்டு 40 ரூபாய்க்கு விற்பனையானது.
தற்போது கிலோவுக்கு 10 ரூபாய்க்கும் குறைவாகவே விலை கிடைக்கிறது. சந்தைக்கு பல மடங்கு வரத்து அதிகரித்துள்ளதால் சில பகுதிகளில் தழையை கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் தழையை அறுவடை செய்யாமல் அப்படியே செடியை அழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வகை தழையில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க தோட்டக்கலைத்துறை வாயிலாக நடவடிக்கை எடுத்தால் நிலையான விலை கிடைக்கும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.