கோப்புபடம்.  
உள்ளூர் செய்திகள்

காங்கயத்தில் இடி மின்னலுடன் கனமழை

மழை காரணமாக காங்கயம் நகர பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.காங்கயம் நகர் தவிர சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது.

மாலை மலர்

 காங்கயம்:

காங்கயத்தில் நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் வாட்டியது. வெப்பத்தின் தாக்கத்தால் காங்கயம் பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பின்னர் மாலை சுமார் 6.30 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து தூறலாக தொடங்கிய மழை படிப்படியாக வேகமெடுத்து பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையானது சுமார் 1 மணி நேரம் பெய்தது.

காங்கயம் நகரில் சென்னிமலை சாலை, திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, பழைய கோட்டை சாலை, தாராபுரம் சாலை, பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் மழைநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடி சென்றன. மழை காரணமாக காங்கயம் நகர பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

இதேபோல் காங்கயம் நகர் தவிர சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பகல் முழுவதும் கடும் வெயிலால் அவதிப்பட்ட காங்கயம் பகுதி மக்களுக்கு நேற்று பெய்த மழை குளு குளு சீதோஷ்ண நிலையை உருவாக்கி, சற்றே இதமாக இருந்தது.