கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

கீழ்பவானி பாசன கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நீர்வளத்துறை அதிகாரிகள் கைவிட வேண்டும்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மங்களப்பட்டியில் தமிழக கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கீழ்பவானி பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் செ.நல்லசாமி தலைமை தாங்கினார். கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் ரவி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதி வரை கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும், மேலும் கீழ்பவானி பாசன கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நீர்வளத்துறை அதிகாரிகள் கைவிட வேண்டும்.

இதற்கு மாறாக நீர்வளத்துறை அதிகாரிகள் செயல்பட்டால் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு தொடங்கப்படும் அனைத்து முயற்சிகளையும் மற்றும் கீழ்பவானி பாசன கால்வாயின் இருபுறமும் உள்ள மரங்கள் வெட்டுவதற்கான நடவடிக்கைகளையும் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள், பாசன விவசாயிகள், நகர, கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து திரண்டு அறவழியில் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.