உடுமலை:
திருப்பூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் உடுமலை சத்திரம் வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் பி.சந்தானகிருஷ்ணன், கைத்தறி மாநில பொதுச்செயலாளர் ஏ.ஜெயப்பிரகாஷ், செயற்குழு உறுப்பினர் என்.சிதம்பரசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் கே.சி.சண்முகம் நன்றி கூறினார். கூட்டத்தில் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக வேலை கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. அதனால் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது. கட்டுமான தொழிலாளர் வாரியஅட்டை பெற்றவர்கள், வேலைக்கு அரசு பஸ்களில் சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது.
கட்டுமான தொழிலாளர்களுக்கு பி.எப். மற்றும் இ.எஸ்.ஐ வசதியை வாரியத்தின் மூலம் வழங்க மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்வது. வாரிய அட்டை பெற்றுள்ள அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் உபகரணங்களை வழங்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.