திருப்பூர்:
ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக கடந்த 4 மாதத்துக்கும் மேலாக அந்நிய பண மதிப்புகள் சீராக தொடர்கின்றன. அன்னிய பண மதிப்பில் ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கங்கள் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக ரூபாய்க்கு நிகரான அந்நிய பண மதிப்பு சரிவு, ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் லாபம் இழப்பு, ஆடைக்கு விலை நிர்ணயிப்பதில் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது.
கடந்த காலங்களில் அந்நிய பண மதிப்பு சரிவால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர். தற்போது டாலர், யூரோ, பவுண்ட் மதிப்புகள் பெரிய அளவிலான மாற்றங்களின்றி ஒரே சீராக தொடர்கின்றன.
கடந்த 2021 செப்டம்பர் மாதம் ரூ.73.11 ஆக இருந்த அமெரிக்க டாலர் மதிப்பு, தற்போது ரூ. 74.42ஆக தொடர்கிறது. ரூ.86.69 ஆக இருந்த ஐரோப்பிய யூரோ மதிப்பு, தற்போது ரூ.84.02 ஆக சிறிதளவு சரிந்துள்ளது.
செப்டம்பர் ரூ.101.17 ரூபாயாக இருந்த பிரிட்டன் பவுண்ட் மதிப்பு ரூ.100.72ஆக உள்ளது.பருத்தி பஞ்சு, நூல் விலை உள்பட அனைத்து வகை மூலப்பொருட்கள் விலைகள் உயர்ந்துள்ளன. நிட்டிங், சாயமேற்றுதல், பிரின்டிங், எம்ப்ராய்டரி என ஆடை தயாரிப்பு சார்ந்த அனைத்து ‘ஜாப் ஒர்க்‘ கட்டணங்களும் அதிகரித்துள்ளன.
இந்தநிலையில் 4 மாதங்களாக அந்நிய பண மதிப்பு சீராக தொடர்வது பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
மேலும் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னாலடை நிறுவனங்கள் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் சிலர் உள்நாட்டு வர்த்தகத்திலும் சிலர் வெளிநாட்டு வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சில சலுகைகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஏற்றுமதியாளர்களுக்கு ஜி.எஸ்.டி ரீபண்ட் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை ஏற்றுமதியாளர்கள் விண்ணப்பம் செய்து பெற்று வருகிறார்கள். அதன்படி கடந்த 2021ம் ஆண்டு ரூ.325 கோடி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:
திருப்பூரில் கடந்த 2019, 2020ம் ஆண்டில் 3575 ஏற்றுமதியாளர்கள் ரூ.479 கோடி ரீபண்ட் பெற்றனர். 2020-2021 ஆண்டில் 1854 ஏற்றுமதியாளர்கள் ரூ.325 கோடி ரீபண்ட் பெற்றுள்ளனர். அரசின் வழிமுறைகளை பின்பற்றி ஏற்றுமதி செய்து வரும் ஏற்றுமதியாளர்களுக்கு ரீபண்ட விரைவாக கிடைத்து விடுகிறது என்றனர்.