திருப்பூர்:
மத்திய பட்ஜெட்டுக்கு திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்க தலைவர் காந்திராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்யும் வகையில் குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அவசரகால கடன் திட்டம் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது தொழில்துறைக்கு உதவியாக இருக்கும். சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கி இருப்பது சிறுதொழில் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.
அரசின் மூலதன முதலீட்டை அதிகரித்திருப்பதால் வேலை வாய்ப்பு அதிகரித்து தனிநபர் வருமானம் உயர வாய்ப்பு உருவாகும்.
தென்னக நதிகளை இணைத்தல், நீர் பாசன திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது, சூரிய ஒளி மின்சார திட்டங்களை ஊக்குவித்தல் போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாகும். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க திட்டமிட்டிருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
மொத்தத்தில் வரவேற்கத்தக்க பட்ஜெட்டாகும். இருந்தாலும் வருமானவரி உச்ச வரம்பை அதிகரிக்காததும், பஞ்சு மற்றும் நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றி பட்ஜெட்டில் தெரிவிக்காததும் வருத்தமளிக்கிறது.