திருப்பூர்:
திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் ‘ராயல் பார்’ என்ற பெயரில் உரிமம் பெற்ற தனியார் ‘பார்’ செயல்படுகிறது. வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ளதால், இதனை மூட வேண்டும் என நீண்ட நாட்களாக அப்பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் மக்கள் முற்றுகையிட்ட நிலையில், தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு நாள் முன்னர்மீண்டும் ‘பார்’ திறக்கப்பட்டது. பொதுமக்கள் முற்றுகையிட்டதால், அதிகாரிகள், போலீசார் தலையிட்டு, பாரை மூட வைத்தனர்.
இந்த விவகாரம் குறித்து, திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை, கலால் துறை உதவி கமிஷனர் சுகுமார், தாசில்தார்க–னகராஜ் முன்னிலையில் நடந்தது. இதில், ‘பார்’ உரிமையாளர் தரப்பில், மூன்று மாதம் அவகாசம் கேட்கப்பட்டது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கூறுகையில், ‘ஏற்கனவே ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் அவகாசம் கேட்டு ஏப்., மாதம் வரை ‘பார்’ செயல்பட்டது. தற்போது மே மாதத்தில் மீண்டும் போராட்டம் நடத்தியும், அவகாசம் கேட்கப்படுகிறது.
இனிமேல் ‘பார்’ திறந்தால் போராட்டம் தீவிரமாக மாறும். முதல்வர் அறிவித்துள்ளவாறு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் மதுக்கடை, ‘பார்’ செயல்படக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்’ என்றனர்.’மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி கருத்து கேட்கப்பட்டுள்ளது. இருதரப்பு நிலையும் கலெக்டரிடம் தெரிவித்து, அதன்பின் முடிவு அறிவிக்கப்படும்,’ என தாசில்தார் தெரிவித்தார்.