கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கான பாடபுத்தகங்கள் பெற்றோர்களிடம் வழங்க முடிவு

ஒமைக்ரான் பரவல் காரணமாக துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவக்கப்படாமல் உள்ளது.

மாலை மலர்

உடுமலை:

அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை, 2021-22ம் கல்வியாண்டின் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக உடுமலை கல்வி மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட பள்ளிகளை மையமாக கொண்டு கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து புத்தகங்கள் வரவழைக்கப்பட்டன. 

அந்த புத்தகங்கள் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் ஒமைக்ரான் பரவல் காரணமாக துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவக்கப்படாமல் உள்ளது.

மீண்டும் ‘ஆன்லைன்’ மற்றும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாட வகுப்புகளை நடத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் மாணவ, மாணவிகளின் பெற்றோரை அந்தந்த பள்ளிக்கு நேரடியாக வரவழைத்து மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

உடுமலை கல்வி மாவட்டத்தில் 118 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை 9 ஆயிரத்து 460 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். 

இவர்களுக்கு நேரடி வகுப்பு துவக்கப்படாமல் உள்ளதால் பாடப்புத்தகங்களை வினியோகிக்க முடியவில்லை. இதனால் பள்ளிகளுக்கு பெற்றோர்களை வரவழைத்து அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.