திருப்பூர்:
திருப்பூர் ஏ.ஐ.டி.யு.சி., பனியன் சங்க பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.
துணை தலைவர் ஈசாக் தலைமை வகித்தார். பொது செயலாளர் சேகர், துணை செயலாளர் செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., அறிமுகமானபின் திருப்பூரின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
தற்போது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வு, பனியன் உற்பத்தி மூலப்பொருட்களான பருத்தி பஞ்சு, நூல் விலையேற்றத்தால், பின்னலாடை நிறுவனங்கள், ஆடை தயாரிக்க முடியாமலும், புதிய ஆர்டர் பெற முடியாமலும் தவிக்கின்றன.
பருத்தி விளைச்சல் இருந்தும் பதுக்கல் காரணமாகவே விலை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. மத்திய அரசு பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்த்து பதுக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உள்நாட்டு தேவை எஞ்சிய பருத்தியை மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.
பின்னலாடை துறையினர் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.