திருப்பூர்:
கூட்டுறவு சங்க நிர்வாக குழுக்களின் பதவிக்காலம் குறைக்கப்பட்ட நிலையில், அவை குறித்த விபரங்கள் சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில், 2018ல் நிர்வாக குழு இயக்குனர், தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அப்போது, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்ததால், பெருமளவு அக்கட்சியினரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, பதவிகளை பெற்றனர்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கூட்டுறவு நிர்வாகக் குழு பதவிக்காலம், மூன்று ஆண்டுகள் என குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில கூட்டுறவு துறை பதிவாளர் சண்முகசுந்தரம், கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர் அனைத்து இணை பதிவாளர்கள் மற்றும் மண்டல துணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
கடந்த டிச-31ம் தேதியுடன், மூன்று ஆண்டு பதவிக்காலம் நிறைவடையும் சங்கங்கள் குறித்த விபரங்களை அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இதன்படி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்க நிர்வாக குழுக்கள் விபரம் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பதவிக் காலம் குறைக்கப்பட்டதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்படும் நிலையில், இந்த சங்க நிர்வாக குழுவினர் அனைவரும் பதவி இழக்கும் நிலை உள்ளது.