உடுமலை:
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உடுமலை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 79 படுக்கைகளும், 144 சாதாரண படுக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
தவிர அரசு கலைக்கல்லூரியிலும் 94 படுக்கைகளுடன் தற்காலிகமாக கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டது. அதேநேரம் நோய்த்தாக்கத்தை தடுக்க தடுப்பூசி திட்டம் தீவிரமாக்கப்பட்டதால் அதன் பாதிப்பு படிப்படியாக குறைந்தது.
ஏற்கனவே ‘கோவிட் கேர் சென்டர்’ அகற்றப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் மட்டும் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அவ்வகையில் கடந்த இரு மாதங்களாக 10-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
தற்போது நோய்த்தொற்று முற்றிலும் குறைந்துள்ளதால், அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கொரோனா வார்டு மூடப்பட்டது.
மருத்துவப்பணிகள் துறையினர் கூறியதாவது:-
கடந்த இரு மாதங்களாக, மாவட்டத்தில் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்ததால் மருத்துவமனைகளில், படுக்கைகள் காலியாகத்துவங்கின.
தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துள்ளதால் தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி, காங்கயம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா வார்டு மூடப்பட்டது.
குறிப்பாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வந்த கொரோனா வார்டு மூடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.