கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

பல்லடம் பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறிய 1305 பேர் மீது வழக்கு

போக்குவரத்து விதிகளை மீறிய 1305 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.2,44,000 வசூலிக்கப்பட்டது.

மாலை மலர்

பல்லடம்:

பல்லடம் பகுதியில் பொது மக்கள் சாலைகளில் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன.

இருந்தும் அவற்றை பின்பற்றாமல் சிலர் செய்யும் விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன.

இதனை தடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டபோலிஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில் பல்லடம் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்ட்டர் திருநாவுக்கரசு, மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 இதில் கடந்த மார்ச் மாதத்தில் இருசக்கரவாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணியாமல் சென்ற 404 பேர் மீதும், குடி போதையில் வாகனங்களில் சென்ற 26 பேர், மேலும் சிக்னலை மதிக்காமல் செல்வது, நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச் செல்வது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 1305 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.2,44,000 வசூலிக்கப்பட்டது .

மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 209 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு பல்லடம் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.