தேர் நிலை அருகில் தோண்டப்பட்ட குழி. 
உள்ளூர் செய்திகள்

அவினாசி கோவிலில் தேர் நிறுத்தும் இடத்தில் பள்ளம் தோண்டியதால் பரபரப்பு

தேர்நிலை அருகில் குழிதோண்டினால் தேருக்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் பள்ளம் தோண்டுவது தடுத்து நிறுத்தப்பட்டது.

மாலை மலர்

அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்புவாய்ந்த அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு முன்பு மெயின்ரோட்டில் பெரிய மற்றும் சிறிய தேர்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 - வது பெரிய தேரான அவினாசி தேரோட்டம் சித்திரை மாத்தில் நடைபெறும்.

இந்த நிலையில் தேர்நிலை அருகில் நேற்று மாலை பெரிய பள்ளம் தோண்டும் பணி நடந்தது. இதுபற்றி தகவலறிந்த கோவில் அலுவலர்கள் அங்கு வந்து விசாரித்துள்ளனர். எந்த அனுமதியுமின்றி செல்போன் கேபிள் பதிக்க அங்கு பள்ளம் தோண்டுவதாக தெரியவந்தது.

தேர்நிலை அருகில் குழிதோண்டினால் தேருக்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் பள்ளம் தோண்டுவது தடுத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், தேர் சக்கரத்தின் மிக அருகில் பள்ளம் தோண்டினால் தேர் சக்கரம் மண்ணிற்குள் இறங்க வாய்ப்புள்ளது.

அப்போது தேர் பக்கவாட்டில் சாய்ந்தால் அசம்பாவிதம் ஏற்படலாம். அதனால் இங்கு பள்ளம் தோண்ட கூடாது என்றனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு பள்ளம் தோண்டிய இடத்தில் கற்களை நிரப்பி கான்கிரீட் அமைத்து தர வேண்டும் என்று கேபிள் பள்ளம் தோண்டியவர்களிடம் எச்சரிக்கை செய்து அதற்கு தங்க நடவடிக்கை மேற்கொண்டனர். தேர்நிலை அருகில் திடீரென பள்ளம் தோண்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.