திருப்பூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினர், சுயேட்சைகள் வேட்பு மனு படிங்களைப் பெற்று உரிய வகையில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். முறையாக பூர்த்தி செய்யா விட்டாலோ, உரிய ஆவணங்கள் இணைக்கப்படாமல் விடுபட்டாலோ போட்டியிடும் வாய்ப்பு பறி போய்விடும்.
கட்சியில் படாத பாடு பட்டு சீட் வாங்கியோ, சுயேச்சையாக மக்கள் மனதில் இடம் பிடித்தோ கவுன்சிலராக வாய்ப்பு உள்ளவர் கூட மனு நிராகரிக்கப்பட்டால் போட்டியிட வாய்ப்பு இழக்கும் நிலை ஏற்படும்.இதனால் மனுவைப் பூர்த்தி செய்வதில் வேட்பாளர்கள் கவனமாக இருப்பர். ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் கூட தாக்கல் செய்வது வழக்கம்.
அவ்வகையில் தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனுக்களை பெற்றுச் சென்றுள்ளனர். மனுக்களை பெரும்பாலும் தனி நபராக நேரடியாக விண்ணப்பதாரரே பூர்த்தி செய்வதில் பெரும் தயக்கம் உள்ளது. இதற்காக ஆடிட்டர்கள் மற்றும் வக்கீல்களை நாடும் நிலை உள்ளது.
மனுவில் கேட்கப்பட்டுள்ள விவரங்களில் பெருமளவு சொத்து விவரம், வழக்குகள் விவரம் போன்றவை முறையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதால் இதற்காக அவர்களை அணுகி படிவங்கள் பூர்த்தி செய்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இப்பணியில் தற்போது ஏராளமான ஆடிட்டர் மற்றும் வக்கீல்கள்பரபரப்பாக ஈடுபட்டுள்ளனர். வேட்பு மனு படிவங்களுடன் ஆடிட்டர் மற்றும் வக்கீல்கள் அலுவலகங்களில் பலரும் காத்திருக்கின்றனர்.