திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில், மாவட்டம் முழுவதும் கடைகள், ஓட்டல்களில் அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அங்கிருந்த குளிர்சாதன பெட்டியில், காலாவதியான இரண்டு கிலோ மதிப்பிலான காடை மற்றும் கோழியை பறிமுதல் செய்து, அழித்தனர். இதையடுத்து உணவகத்தில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பயன்படுத்தியதைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக உணவகத்துக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்தார்.
மேலும் ஷவர்மா விவகாரத்தால் அனைத்து அசைவ உணவகங்களிலும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பை செய்து வரும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஷவர்மா உணவை தயார் செய்வது மற்றும் விற்பனையின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து எடுத்து கூறினர்.
திருப்பூர் கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவர் ஷெரீப் காலனியில் உள்ள ஒரு ஓட்டலில் பிரியாணி வாங்கி சாப்பிட்டுளளார். அப்போது பிரியாணியில் புழு நெளிந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த கவின்குமார் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து ஓட்டல் ஊழியர்களிடம் கூறினார். மேலும் கவின்குமாருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. தகவல் அறிந்ததும் கவின்குமாரின் உறவினர்கள் அங்கு வந்து ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.