திருப்பூர்:
தமிழக அரசு புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் 60 நாட்களுக்குள் வழங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக கடந்த 4 மாதங்களாக ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி 28-ந்தேதி வரை விண்ணப்பித்த நபர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வந்துள்ளன. சென்னையில் அச்சிடப்பட்டு மாவட்டத்துக்கு தருவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தெற்கு - 1,559 கார்டுகள், திருப்பூர் வடக்கு - 1,432, உடுமலை - 920, பல்லடம் - 854, தாராபுரம் - 801, காங்கயம் - 663, அவிநாசி - 611, ஊத்துக்குளி - 359, மடத்துக்குளம் - 342 என, 7,541 கார்டுகள் வந்துள்ளன.
இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் கூறுகையில்:
மாவட்டத்துக்கு, 7,541 ரேஷன் கார்டுகள் அச்சாகி வந்துள்ளன. மாவட்டத்தில் இருந்து தாலுகா வாரியாக பிரித்து ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு பிரித்து வழங்கப்படும். கார்டு தேவையானவர்கள் தாலுகா அலுவலகத்துக்கு நேரில் சென்றும் பெற்றுக்கொள்ளலாம். புதிய கார்டு பெற்றால் ஏப்ரல் மாதத்தில் இருந்து ரேஷன் பொருட்கள் பெறலாம் என்றனர்.