மங்கலம் :
மங்கலம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் திருப்பூர் மேற்கு ரோட்டரி பங்களிப்புடன் ரூ.27லட்சம் மதிப்பீட்டில் நடமாடும் தகனமேடை வாகனத்தை மங்கலம் ஊராட்சி பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார். திருப்பூர் மேற்கு ரோட்டரி தலைவர் பி.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் பி.இளங்குமரன், ஊராட்சி மன்றத்தலைவர் ஆகியோர் கொடியசைத்து நடமாடும் தகனமேடை வாகனத்தை தொடங்கிவைத்தனர். விழாவில் ரோட்டரி நிர்வாகிகள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நடமாடும் தகனமேடை வாகனம் மூலம் மங்கலம் ஊராட்சி, சுற்றுவட்டார பகுதியில் 10 கி.மீ. தொலைவில் உள்ள 10 ஊராட்சிகள், மாநகராட்சி 4 வார்டு பொதுமக்கள் பயனடைவார்கள். முன்னதாக திருப்பூர் மேற்கு ரோட்டரி நிர்வாகிகள் நடமாடும் தகனமேடை வாகனத்தின் சாவியை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவரிடம் வழங்கினர்.