உடுமலை :
நூலக தகவல் அறிவியலின் தந்தை எஸ் .ஆர். ரங்கநாதன் பிறந்த நாள் நூலகர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்ட நூலக ஆணை குழு சார்பில் உடுமலை முதற்கிளை நூலகத்தில் நூலகர் தின விழா, சிறப்பாக நூலக பணியாற்றிய நூலகர்களுக்கு பாராட்டு விழா ,மாவட்ட கலெக்டரிடம் சான்றிதழ் பெற்ற நூலகர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும்விழா கொண்டாடப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நூலகர்கள் கலந்து கொண்டனர்.
நூலகர் தின விழா நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட நூலக அலுவலர் வே.மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் ஸ்ரீதர் இளநிலை உதவியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட ஊதியமைய நூலகர் தர்மராஜ் வரவேற்றார் . கணேசன் ,பீர்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் நூலகர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டி, கோலப்போட்டி போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள நூலகர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகளை மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் வழங்கி னார்.
தொடர்ந்து நூலகப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய நூலகர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். நூலகப் பணியை பாராட்டி அனைத்து நூலகர்களுக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது. புதிய மாவட்ட நூலக அலுவலராக பொறுப்பேற்று உடுமலை வந்த மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரனுக்கு திருப்பூர் மாவட்ட நூலகர்கள் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. தாராபுரம் நூலகர் பால ராஜசேகர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிறைவாக திருப்பூர் மாவட்ட முதல் நிலை நூலகர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.