திருப்பூர்:
பள்ளி செயல்பாடுகளில் முன்னாள் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் அவர்களின் அடிப்படை தகவல்களை இம்மாத இறுதிக்குள் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் படித்த, முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து நிதிசார்ந்த, கற்றல், தொழில்நுட்ப உதவிகளை பெறும் வகையில் தகவல்கள் திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சம், 25 பேரின் விபரங்கள் பதிவேற்ற வேண்டும். பெரும்பாலான தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், முன்னாள் மாணவர்களின் விபரங்களை பதிவேற்றாதது தெரியவந்துள்ளது.
மாவட்ட வாரியாக முன்னாள் மாணவர் விபரங்கள் பதிவேற்றாத பள்ளிகளுக்கு மீண்டும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள், முன்னாள் மாணவர்களின் பெயர், படித்த ஆண்டு, பள்ளிக்கான எந்த வகை சேவையில் ஈடுபட விருப்பம் குறித்த தகவல்கள் பெற்று பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், முன்னாள் மாணவர்கள் குறித்த தகவல்கள் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து தலைமையா சிரியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-ஆப் குழுக்கள் உருவாக்கி முன்னாள் மாணவர் செயலியின் லிங்க் பகிர்ந்து, தகவல்கள் பதிவேற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி சார்ந்த செயல்பாடுகள் மட்டுமல்லாமல், சிறப்பு வகுப்பு எடுத்தல், போட்டிகளுக்கு பயிற்சி அளித்தல், தொழில்நுட்ப ரீதியாக உதவுதல் என எந்தவகையில் வேண்டுமானாலும், மாணவர்கள் தாங்கள் படித்த அரசுப்பள்ளிக்கு உதவலாம். இம்மாத இறுதிக்குள் தகவல்கள் பதிவேற்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.