உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதியில் உற்பத்தியாகி வருகின்ற ஆறுகளை தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், மறையூர் பகுதியில் உற்பத்தியாகி ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது.
அத்துடன் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றாறுகளும், ஓடைகளும் அணைக்கு கை கொடுத்து உதவி வருகிறது. இந்த அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆறு, கல்லாபுரம் வாய்க்கால் மூலமாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்தநிலையில் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 81.04 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,062 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.