வெள்ளகோவில்:
வெள்ளகோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாக கரட்டுப்பாளையம், நாச்சிபாளையம், கச்சேரிவலசு, இந்திரா நகர், அய்யனூர், குமாரவலசு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் அப்குதிகளில் இதுவரை நாய்கள் கடித்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. இந்நிலையில் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் தங்கவேல் (வயது 37) என்பவர் ஆடுகளை வளர்த்து ஜீவனம் செய்து வருகிறார். சம்பவத்தன்று தங்கவேல், வழக்கம் போல் தனது ஆடுகளை மேய்த்து பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அடுத்த நாள் காலையில் பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஆடுகளின் நிலைமையை கண்டு தங்கவேல் பதறி போனார். 6 செம்மறி ஆடுகள், 2 வெள்ளாடுகளை நாய்கள் கடித்து குதறி இறந்து கிடந்தன, இதனால் தங்கவேல் மிகுந்த வேதனை அடைந்தனர். மேலும் இப்பகுதியில் தொடர்ந்து தெருநாய்கள், ஆடுகளை கடித்து இறப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.