தங்கம்மாள் ஓடையில் கட்டப்பட்ட தரைமட்ட பாலம் சேதம் அடைந்ததுள்ளதை படத்தில் காணலாம்.  
உள்ளூர் செய்திகள்

உடுமலை தங்கம்மாள் ஓடையை தூர்வார கோரிக்கை

இரண்டு புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.ஓடை முழுவதும் செடிகள் புற்கள் முளைத்து புதர் மண்டியது.

உடுமலை :

உடுமலை நகரின் நுழைவுப் பகுதியில் உடுமலை - பொள்ளாச்சி சாலையை ஒட்டிய பகுதியில் தங்கம்மாள் ஓடை உள்ளது.இதில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற உபரிநீர் செல்கிறது. இந்த ஓடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரபட்டு அதன் இரண்டு புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஆனால் தூர் வாரும்போது எடுக்கப்பட்ட மண்ணை முழுமையாக அகற்றவில்லை.இதனால் அவை சரிந்து மீண்டும் ஓடையை ஆக்கிரமித்து கொண்டது. இதன் காரணமாக தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி வந்ததுடன் ஓடை முழுவதும் செடிகள் புற்கள் முளைத்து புதர் மண்டியது.இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வந்ததுடன் அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். அதைத்தொடர்ந்து தங்கம்மாள் ஓடையை தூர்வாரி அதில் தேங்கியுள்ள மண்ணை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.அதன் பேரில் பெயரளவுக்கு மட்டுமே ஓடையில் தேங்கிய மண் அகற்றும் பணி நடைபெற்றது.இதனால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி வருகிறது.மேலும் தங்கம்மாள் ஓடையின் இரண்டு புறங்களையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட தரைமட்ட பாலமும் சேதம் அடைந்தது. அதை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன் பிறகு தரைமட்ட பாலங்கள் இடித்து அகற்றப்பட்டது.அதில் ஒரு பாலம் அபாயகரமான நிலையில் உள்ளது. பொதுமக்களும் வேறு வழியின்றி அதை கடந்து சென்று வருகின்றனர்.இடித்து அகற்றப்பட்ட பாலங்கள் புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் பொதுமக்கள் தங்கம்மாள் ஓடையை கடப்பதற்கு நீண்ட தூரம் சுற்றி வர வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

எனவே தங்கம்மாள் ஓடையை முழுமையாக தூர்வாரி சீரான முறையில் கழிவுநீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓடையின் குறுக்காக தரைமட்ட பாலங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.