திருப்பூர்:
திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் முதல் இடுவம்பாளையம் வரை சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சாக்கடை நீர் சாலைகளில் செல்வதால் அப்பகுதியில் உள்ள முல்லை நகர் ,அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இது தொடர்பாக பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .தகவல் கிடைத்ததும் திருப்பூர் மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.